Wednesday, January 27, 2021

திருமலையில் 'குட்டிப்புலி' குழுவின் 5 உறுப்பினர்கள் கைது


திருகோணமலை - தேவநகர் மற்றும் ஆனந்தபுரி பகுதியில் செயற்படுவதாக கூறப்படும் 'குட்டிப்புலி' என்ற வன்முறை குழுவின் 5 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையின் புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவல்களுக்கு அமைய காவல்துறை விசேட அதிரடி படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய தேவநகர் பகுதியில் முதலாவது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதோடு அவரிடமிருந்து வாள், 12 தொலைபேசிகள், 5 சிம் அட்டைகள், கமரா, பலவந்தமாக பெற்றுக் கொண்ட வெளிநாட்டு கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

பின்னர் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை விடுவிப்பதற்கு குட்டிப்புலி என்ற குழுவின் உறுப்பினர்கள் முயற்சித்த போது மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிணங்க தேவநகர் மற்றும் ஆனந்தபுரி பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனார்.

பல குற்றச்செயல்கள் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பீ.எம்.விஜயகாந்த் என்பவரின் தலைமையில் குறித்த குழு செயற்படுவதாக தற்போத தெரியவந்துள்ளது.

அவர் சி.ஐ.டி. விஜி மற்றும் நேவி விஜி என்ற பெயரிலும் அழைக்கப்படுவதாக காவல்துறை விசேட அதிரடி படையினர் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக உப்புவெளி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை விசேட அதிரடி படையினர குறிப்பிடுகின்றனர்.

No comments:

Post a Comment