Thursday, January 28, 2021

கொரோனா தடுப்பூசியை விரும்பாதவர்கள் தவிர்த்துக்கொள்ள முடியும்


கொரோனா தடுப்பூசியை விருப்பம் இல்லாதவர்கள் தவிர்த்துக்கொள்ள முடியும் என ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது ஒருவரின் தனிப்பட்ட தீர்மானம் என லலித் வீரதுங்க கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள COVID தடுப்பூசியின் முதலாவது தொகுதி இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இன்று காலை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி, பாரத பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க தடுப்பூசி பரிசளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் Astrazeneca Covishield தடுப்பூசி மும்பையின் Serum Institute-இனால் உற்பத்தி செய்யப்படுகின்றது.

இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 5 இலட்சம் Astrazeneca Covishield தடுப்பூசிகளை ஏற்றிய விமானம் இன்று முற்பகல் 11.45 அளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இன்று கொண்டுவரப்பட்டுள்ள 2,50,000 தடுப்பூசிகளின் நிறை 1323 கிலோகிராம் ஆகும்.

குளிரூட்டபட்ட விசேட வாகனத்தில், Astrazeneca Covishield தடுப்பூசிகள், சுகாதார அமைச்சிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், 2 – 8 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் அவை களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த தடுப்பூசிகள் 25 மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கை மேல் மாகாணத்தின் 06 வைத்தியசாலைகளில் நாளை (29) ஆரம்பிக்கப்படவுள்ளது.

COVID ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 1,50,000 ஆயிரம் சுகாதார சேவையாளர்கள், முப்படையின் 1,20,000 பேர் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினருக்கு முதற்கட்டமாக தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது.

இதனிடையே, ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைவாக சீனாவினால் 03 இலட்சம் கொவிட் தடுப்பூசிகள் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளதாக COVID தடுப்பூசியை தருவிப்பது தொடர்பான குழுவின் தலைவர், ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment