Tuesday, April 20, 2021

25 தனி தமிழ் தொகுதிகளை, உருவாக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை


மாகாண சபைக்காக புதிய முறைகளை உருவாக்குகின்ற போது தனித்தமிழ் மக்களை மாத்திரம் உள்ளடக்கியதாக 25 தமிழ் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சித் தலைவர்களின் கூட்டம் பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் நேற்று (19) நடைபெற்ற போதே செந்தில் தொண்டமான் இதனை தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தலை புதிய முறையின் இரண்டு வழிமுறைகளின் கீழ் நடத்துவது தொடர்பில் ஆராயப்பட்ட போதிலும் அதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது எதிர்ப்பினை வௌியிட்டுள்ளது.

மலைநாட்டில் சுமார் 10 இலட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில், புதிய தேர்தல் முறைப்படி 5 உறுப்பினர்கள் மாத்திரமே தெரிவு செய்யப்படக்கூடிய நிலை காணப்படுவதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது மலையகத்தில் 25 மாகாண சபை உறுப்பினர்கள் காணப்படுகின்ற நிலையில், புதிய முறை மூலம் 5 பேர் மாத்திரம் தெரிவு செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனித்தமிழ் மக்களை மாத்திரம் உள்ளடக்கியதாக 25 தமிழ் தொகுதிகளை உருவாக்குமாறும் அதற்கு தங்களின் ஆதரவினைத் தருவதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் செந்தில் தொண்டமான் கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment