Friday, May 7, 2021

நாட்டில் 20 லட்சம் பேஸ்புக் கணக்குகளை இடைநிறுத்த தீர்மானம் - பயங்கரவாதம், அடிப்படைவாதம், இனவாதத்தை தூண்டுகின்றதாம்


நாட்டின் மொத்த பேஸ்புக் கணக்குகளில் சரியான உரிமையாளர்கள் இல்லாதவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுமார் 20 லட்சம் கணக்குகளை இடைநிறுத்துவதற்கு தேவையான சட்ட நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இவ்வாறான கணக்குகளை ஒழுங்குபடுத்தி கட்டுப்படுத்துவதற்கு, அரச கட்டமைப்பிலுள்ள நிறுவனங்களின் ஊடாக – தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வழக்கத்திலுள்ள சட்டத்துக்கு அமைய வேலைத்திட்டம் ஒன்றை வகுப்பதற்கு அமைச்சர் அலி சப்ரியும் தானும் இணைந்து அமைச்சரவை பத்திரம் ஒன்றை முன்வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“இதற்கு அனுமதி கிடைக்கப் பெற்றதும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

உரிமையாளர்கள் இல்லாத பேஸ்புக் கணக்குகளின் மூலம் பயங்கரவாதம், அடிப்படைவாதம் மற்றும் இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இளம் சந்ததியினரை வழிகெடுக்கும் பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளை தூண்டுவதற்கும் இது வழி வகுப்பதாக கண்காணிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தேசிய பாதுகாப்பையும் சிறந்த சமூக கட்டமைப்பையும் வழிநடத்தி செல்லும் பொருட்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றும் ஊடக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment