Friday, May 7, 2021

இலங்கையின் 7 ஆவது அதிவேக, நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம் (வீடியோ)


நாம் நாடு என்ற ரீதியில் ஒன்றாக கைகோர்த்து இந்த சவால் மிகுந்த காலப்பகுதிக்கு முகங்கொடுப்போம் என அலரி மாளிகையில் இன்று (07) நடைபெற்ற ருவண்புர அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

2014ஆம் ஆண்டளவில் திட்டமிடல் நிறைவுசெய்யப்பட்டிருந்த ருவண்புர அதிவேக நெடுஞ்சாலை திட்டம் கடந்த அரசாங்கத்தினால் முழுமையாக கைவிடப்பட்டிருந்தது. இத்திட்டத்தின் முதல் கட்ட பணிகள் பிரதமரின் தலைமையில் இன்று ஆரம்பிக்கப்பட்டதுடன், அதற்கமைய கஹதுடுவ முதல் இங்கிரிய வரையிலான 24 கிலோமீற்றர் வரையான முதற்கட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டங்களின் போது இரத்தினபுரி மற்றும் பெல்மதுல்ல வரை இந்த அதிவேக நெடுஞ்சாலை நீடிக்கப்படும்.

ருவண்புர அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிப்பின் மூலம் போக்குவரத்து நெரிசலை குறைத்தல், செலவை குறைத்தல், நேர வீண்விரயத்தை குறைத்தல், தேயிலை, ஆடை, சிறு ஏற்றுமதி பயிர் மற்றும் இரத்தினக்கல் சந்தை மற்றும் விநியோக இடங்களுக்கான அணுகலை எளிதாக்கல், சுற்றுலாத்துறை உள்ளிட்ட முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்தல் மற்றும் புதிய வேலைவாய்ப்புகள் போன்ற எதிர்பார்க்கப்படும் அனுகூலங்கள் பலவாகும்.

ருவண்புர அதிவேக நெடுஞ்சாலையின் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,

சப்ரகமுவ மாகாண மக்களுக்கு மிகவும் அண்மித்த ருவண்புர அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ள கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.

நாம் தற்போது ஆரம்பிப்பது இலங்கையின் ஏழாவது அதிவேக நெடுஞ்சாலையாகும். அன்று அதிவேக நெடுஞ்சாலைகளின் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப காலப்பகுதி முதல் சப்ரகமுவ மாகாணத்தின் எமது அன்பார்ந்த மக்கள் இரத்தினபுரிக்கு அதிவேக நெடுஞ்சாலையொன்றை எப்போது நிர்மாணிப்பீர்கள் என எம்மிடம் கேட்டிருந்தமை எனக்கு நினைவிருக்கிறது.

அது தொடர்பில் கவனம் செலுத்தி, ருவண்புர அதிவேக நெடுஞ்சாலையின் பணிகளை ஆரம்பிப்பதற்கு நாம் கடந்த 2014ஆம் ஆண்டிலேயே திட்டமிட்டிருந்தோம்.

அன்று நாம் அதற்கான அனைத்து திட்டங்களையும் நிறைவுசெய்திருந்தோம். எனினும் அதனை ஆரம்பிப்பதற்கு முன்னர் தேர்தலில் தோல்வியடைந்து நாம் வீடு செல்ல நேர்ந்தது.

அன்று ஆட்சிக்கு வந்த அரசாங்கம் நாட்டின் அபிவிருத்தியை நாம் விட்டு சென்ற இடத்திலிருந்து ஆரம்பித்து முன்னெடுத்து செல்லும் என எண்ணினோம்.

ஆனால் அவர்களுக்கு அதிகாரத்தை பறித்தெடுக்கும் தேவை மாத்திரமே இருந்ததே தவிர நாட்டை அபிவிருத்தி செய்யும் தேவை இல்லை. அதனால் நாம் ஆரம்பித்திருந்த அனைத்தும் கடந்த அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டது. அது மாத்திரமன்றி நாம் செய்தவைக்காக எம்மை பழிவாங்கினர். நீதிமன்றம் மற்றும் ஆணைக்குழுக்களின் முன் எம்மை கொண்டு நிறுத்தினர்.

தேசிய பாதுகாப்பும், பொருளாதாரமும் பூச்சியப்படுத்தப்பட்டு, அபிவிருத்தி நிறுத்தப்பட்டிருந்த ஒரு நாட்டையே நாம் மீண்டும் பொறுப்பேற்றோம். எனினும் அந்த சவாலை நாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டோம்.

நாட்டை அபிவிருத்தி செய்தல், நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றல் போன்று இந்நாட்டு மக்களுக்கு எப்போதும் சிறந்ததை வழங்குவதே எமது தேவையாக காணப்பட்டது.

அதனால் எத்தகைய தடைகள் நேரிடினும், எத்தகைய இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியிலேனும் நாம் ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நாம் முன்வைத்த கொள்கைகள் யதார்த்தமாகும் வரை அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இன்று ஆரம்பிக்கப்படும் ருவண்புர அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ முதல் இங்கிரிய வரையிலான முதல் கட்டத்தை இரண்டரை வருடங்களுக்குள் நிறைவு செய்வோம் என எமது அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் என்னிடம் குறிப்பிட்டனர். அவர்கள் உள்ளிட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.

இந்நெடுஞ்சாலையின் 24 கிலோமீற்றர் வரையான முதல் கட்டத்திற்காக ரூபாய் 54.7 பில்லியன் தேசிய நிதியை அரசு செலவிடுகிறது. இதன் கட்டுமானப் பணிகளை உள்ளூர் நிறுவனமொன்றே பொறுப்பேற்றுள்ளது.

முதல் கட்ட பணிகள் நிறைவடைந்தவுடன் இங்கிரிய முதல் இரத்தினபுரி வரையான இரண்டாம் கட்டம் மற்றும் இரத்தினபுரி முதல் பெல்மதுல்ல வரையான மூன்றாம் கட்டம் என ருவண்புர அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த வாய்ப்பு கிடைக்கும் என நான் நம்புகின்றேன்.

அதிவேக நெடுஞ்சாலைகளே இந்நாட்டில் அதிக விமர்சனத்திற்கு உள்ளான திட்டமாகும். ஆனால் அவ்வாறு விமர்சித்தவர்கள் இன்று அந்த அதிவேக நெடுஞ்சாலைகளின் மூலமான வசதிகளை அனுபவித்து பயணித்து வருகின்றனர். நாம் அது குறித்து பெருமையடைகிறோம். 

தற்போது மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மீரிகம முதல் பொதுஹெர வரையான பகுதியை வெகுவிரைவில் மக்களின் பாவனைக்காக திறந்துவைப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.


No comments:

Post a Comment