Tuesday, December 29, 2020

புதிய நிபுணர் குழுவின் பரிந்துரைகள், ஜனாதிபதியியிடம் நாளை செல்கிறது - நல்லது நடக்க பிரார்த்திப்போம்


நாட்டில் அதிகரித்து வருகின்ற தொடர் அழுத்தங்கள் காரணமாகவும், சர்வதேச  அங்கீகாரம் பெற்ற துறைசார் வல்லுனர்களால் முன் வைக்கப்பட்ட மறுக்க முடியாத  ஆதாரபூர்வமான நிரூபனங்கள் காரணமாகவும் அரசாங்கம் 24.12.2020 அன்று அனுபவம் மிக்க நுண்ணியல் நிபுணர்களையும் உள்ளடக்கியதான  11 உறுப்பினர்களைக் கொண்ட புதிய குழுவினை நியமித்துள்ளது.

COVID-19 இன் தொற்றானது இலங்கையில் உருவான காலத்தில் இருந்தே  ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சரால் நிபுணர்களின் பரிந்துரைகளுடன் அடக்கம் செய்ய அனுமதிப்பது எனும் விடயம் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தப்பட்டு வந்தது.

இதேபோல்  அடக்கம் செய்வது தீங்கு விளைவிக்கும் என்பது விஞ்ஞான பூர்வமாக  நிரூபிக்கப்பட்டால் , நாம் அடுத்தவருக்கு தீங்கு விளைவிக்க விரும்பாதவர்கள் எனும் அடிப்படையில் ஜனாசாக்களை அடக்கம் செய்ய வேண்டும் எனும் எமது செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துவோம் என்பதை ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வந்ததுடன் இதனை அனைத்து பொதுமக்களுக்கும் , அதிகாரிகளுக்கும் அவ்வப்போது தெரியப்படுத்தி வந்தோம்.

கடந்த 10 மாதங்களில், உலகளாவிய ரீதியில் 194 நாடுகளிலும் COVID-19 காரணமாக மரணித்த குறைந்தது 1.5 மில்லியன்  உடலங்கள் அடக்கம் செய்யப்பட்டன.

இதன்போது அடக்கம் செய்வதன் மூலமாக   தீங்கு விளைவிக்கும் என எங்குமே அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை, 

இதற்கு முந்தைய குழுவின் பரிந்துரைகளானது  சர்ச்சைக்குரியவையாகவும், எந்த வித  ஆதாரபூர்வமற்ற தெரியாதவைகளை நிரூபணப்படுத்தக் கூடிய அளவுக்கு அவர்களால் நிரூபிக்க முடியாத அல்லது நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் அற்றவையாக இருக்கின்ற காரணத்தினால் அந்த பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்பது வெளிப்படையாக அறியப்பட்டதால் , தற்போது ஒரு புதிய நிபுணர் குழுவை அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட , ஏற்றுக் கொள்ள முடியாததான அந்த பரிந்துரைகள் எதுவுமே வெளிப்படையாக அரசாங்கத்தால் மக்களது பார்வைக்கு முன் வைக்கப்படாமை முஸ்லிம் சமூகத்தினால் ஏற்க முடியாமல் இருந்தது , அவர்களால் கொடுக்கப்பட்ட அறிக்கையானது வெளிப்படையாகவும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருந்திருந்தால் , அரசின் தீர்மானத்தோடு மக்கள் இணங்கி இருப்பார்கள் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ள தரம் வாய்ந்த  நிபுணர் குழாமானது விஞ்ஞான ரீதியான காரணங்களின் அடிப்படையில் செயற்படும் என்பதில் எங்களுக்கு பூரண  நம்பிக்கை இருக்கிறது.

அத்துடன் ஜனாதிபதி அவர்களும், பிரதமரும், சுகாதார அமைச்சரும் மீண்டும் மீண்டும் அறிவித்ததன் பிரகாரம் நிபுணத்துவ குழுவின் சிபாரிசுகளது அடிப்படையின் படி நாம் தீர்வை அடைவோம் என்றும் நம்புகிறோம்.

தற்போதைய இந்த புதிய நிபுணர் குழாமினது  கண்டுபிடிப்புகள் முற்றிலும் அறிவியலை அடிப்படையாகக் கொண்டவையாகவும் ,  சர்வதேச அமைப்புகள்  மற்றும் பல்வேறு துறைசார் வல்லுநர்களால் வழங்கப்பட்டுள்ள வைரஸால் பாதிக்கப்பட்ட உடலங்களை  அடக்கம் செய்வதானது Covid 19 வைரஸை பரப்பக்கூடிய வகையில்  நிலத்தடி நீரை பாதிக்கும் ஆபத்தினை ஏற்படுத்தாது எனும் வகையிலே அமையும் என நான் நம்பிக்கை கொள்ள விரும்புகிறேன்.

தற்போது தயாரிக்கப்பட்டுள்ள புதிய நிபுணர் குழாமினது அறிக்கையானது எதிர்வரும் 30.12.2020 அன்று சுகாதார அமைச்சின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட உள்ளது.

உண்மையிலே இந்த முழ அறிக்கையும் எந்த விதமான கடைசி நேர மாற்றங்களோ திருத்தங்களோ இன்றி முழுமையாக சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன்.

எனவே இவ்வாறு 30.12.2020 இலே வழங்கப்படுகின்ற புதிய நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்டையிலே ஜனாதிபதி , பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோர் ஏற்கனவே தாங்கள் அளித்த வாக்குறுதியின் பிரகாரம் செயற்பட்டு , தேவையான சட்டத்தினை இயற்ற வேண்டும் என நான் வேண்டிக் கொள்கின்றேன்.

குறித்த  புதிய நிபுணர் குழாமினது அறிக்கையானது சுகாதார அமைச்சின் மூலமாகவோ அல்லது ஜனாதிபதி செயலகத்தின் மூலமாகவோ பொதுமக்களுக்கு கிடைக்கப் பெற  வேண்டும்  என்பதை கவலையோடு வாழும் முழு முஸ்லிம் சமூகத்தின் சார்பில் கேட்டுக் கொள்வதுடன் , துயரத்தோடும், வலியோடும்  உள்ள குடும்ப உறவுகளுக்கும் அது ஆறுதலாக அமையும் எனவும் வேண்டிக் கொள்கிறேன்...

மேலும் இவ்வறிக்கையானது பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கும் , அதிகாரிகளுக்கும் இடையே நிலவுகின்ற சந்தேகம் மற்றும் அச்ச நிலைமையினை குறைக்கவும் , இலங்கையிலே Covid 19 வைரஸின் தாக்கத்தை குறைத்து அதனை இல்லாதொழிக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவும் ஏதுவாக அமையும் என எதிர்பார்க்கிறேன்.

எங்களது அடிப்படை உரிமையை மீட்டெடுப்பதற்காக கடுமையானதும் துயர் நிறைந்ததுமான மனக்குமுறல்களுக்கு மத்தியில் கடந்த 10மாதங்களாக நாங்கள் அனுபவித்து வந்த துயர்களிற்கு பின்னால் இறைவன் உதவியால் விஞ்ஞான ரீதியாகவும் , மனிதாபிமான அடிப்படையிலும் எங்களுக்கு ஒரு ஆறுதலை ஏற்படுத்தக் கூடிய ஒரு நம்பிக்கையினை இங்கு வெளிப்படுத்துகிறேன்

இன்ஷா அல்லாஹ்

Seyed Ali Zahir Moulana

No comments:

Post a Comment