Sunday, December 6, 2015

சிசிக்கு ஆதரவான 'எகிப்தை நேசிப்பவர்கள்' வெற்றி பெற்றுள்ளார்களாம்..!

எகிப்து நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் அல்-சிசிக்கு ஆதரவான கட்சியினர் அமோக வெற்றி பெற்றனர்.

எகிப்து நாடாளுமன்றத்துக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. இதில் "எகிப்தை நேசிப்பவர்கள்' கூட்டணி வேட்பாளர்கள் 120 இடங்களில் வெற்றி பெற்றனர்.

முன்னதாக, அந்நாட்டில் அப்போது நடைமுறையில் இருந்த தேர்தல் சட்டம், எகிப்து அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதையடுத்து, 2012-ஆம் ஆண்டு ஜூன் மாதம் எகிப்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. நாடாளுமன்றத்துக்கான தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இரண்டாம் கட்டத் தேர்தல் நவ. 21-ஆம் தேதி முதல் டிச. 2-ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன.

அதில் "எகிப்தை நேசிப்பவர்கள்' கூட்டணியினர் வெற்றி பெற்றதாக அந்நாட்டுத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்தக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் அதிபர் அல்-சிசிக்கு ஆதரவு தெரிவித்த வருகின்றன.

தற்போது அந்நாட்டு அதிபராக உள்ள அல்-சிசிக்கு சட்டமியற்றும் அதிகாரம் உள்ளது.

எகிப்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது முதல் இது வரை நிறைவேற்றப்பட்ட அனைத்து சட்டங்களும் மறு பரிசீலனை செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தில் முறைப்படி நிறைவேற்றப்பட வேண்டும் என்பது குறிப்பிடத் தக்கது.

எகிப்தில் 30 ஆண்டுகளாக அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக், 2011-இல் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டார்.

முபாரக் பதவி நீக்கத்துக்குப் பிறகு, 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் முகமது மோர்ஸி ஆட்சிக்கு வந்தார்.

2013-ஆம் ஆண்டில் ராணுவத்தால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு, இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சி தடை செய்யப்பட்டது.

No comments:

Post a Comment