Sunday, January 17, 2021

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை அழைத்துவர 2 நடைமுறைகளை பின்பற்ற நடவடிக்கை


வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்துவருவதற்கு இரண்டு நடைமுறைகளை பின்பற்றப் போவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதே​வேளை தனிமைப்படுத்தலுக்கான ஹோட்டல்களில் உட்படுத்தப்படும் நபர்களிடமிருந்து அறவிடப்படும் கட்டணத்தை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் இரண்டு முறைமையின் கீழ் நாட்டுக்கு அழைத்துவரப்படுவர்.

அரசாங்கத்தின் தலையீட்டுடன் ஒரு நாளில் ஒரு விமானம் மூலம் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும்.

மற்றையது பல்வேறு நாடுகளிலுள்ள பல்வேறு விமான நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்கள் இங்கு வரும்போது அந்த விமானங்களில் சுமார் 75 இலங்கையர்களை அழைத்து வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 300 நபர்களை ஏற்றிச் செல்லக்கூடிய விமானங்களில் 50 அல்லது 75 பயணிகளை ஏற்றிவர தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாகவே விமான டிக்கெட்டுகளின் கட்டணங்களை அதிகரித்து அறவிட வேண்டிய நிலை நேர்ந்தது.

தற்போது அந்தக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதே வேளை நான்கு , ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு முறையே 7,500 - 12,500 வரையான கட்டணம் அறவிடப்பட்டது. பின்னர் ஏனைய ஹோட்டல்களும் தனிமைப்படுத்தலுக்கு அனுமதிகோரிய போது பிரச்சினை உருவெடுத்தது.

அதற்கிணங்க 3, 4,5 நடசத்திர ஹோட்டல்களில் நாளை முதல் கட்டணங்களைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஹோட்டல் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment