Saturday, April 4, 2020

2 நாளைக்கு பிறகு நாங்கள் இன்றுதான் சாப்பிடுகிறோம் (இலங்கையில் மனதை உருக்கும், உண்மைச் சம்பவம்)

அநுராதபுரம் மாவட்டத்தில் அது ஒரு குக்கிராமம். இயற்கை எழில் கொஞ்சும் வனப்புகளும் நீர் நிலைகளும் அக் கிராமத்தின் வசீகரத்  தோற்றத்தை மேலும் அதிகரிக்கின்றது.

இலங்கையின் புராதான அடிச்சுவடுகள் மற்றும் அக்காலத்து மன்னர்களால் கட்டப்பட்ட குளங்கள், விகாரைகள் என பல்வேறு பாரம்பரியங்கள் அக் கிராமத்தை மேலும் அழகுரச் செய்கின்றது.

மூஸீன் நானாவும் அவ்வூரில் வசிக்கும் ஒரு கூலித் தொழிலாளி.

 தனது  4 பெண் குழந்தைகளில் மூத்த மகள் திருமணம் முடித்தவள். ஆனால் அனைவரும் அந்த ஓலைக் குடிசையில் தான்.

ஊரடங்கு சட்டம் (Curfew) பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பல நாட்களாக மூஸீன் நானாவுக்கும் வேலை இல்லை.

என்றாலும் மர்ளியா தனது கணவரின் கஷ்டங்களை விளங்கி  இந்நாட்களில் வாழ்க்ககைச் செலவை மிகச் சிக்கனமாக மேற்கொண்டு வருகின்றாள்.

நாட்களும் செல்கின்றது. கொண்டு வந்த பொருட்களும் முடிவடைகின்றது.

அன்று பகல் 2 மணி.......

"மகள்! பகளேக்கு ஆக்கோனும், 
பருப்பு ஈக்குதா?"

"இல்ல உம்மா!
மூனு சுன்டு அரிசி மட்டும் தான் ஈக்குது"

மர்ளியா அடுப்பு மூட்ட விறகுகளை ஒன்று சேர்க்கிறாள்.

மூஸீன் நானாவுடைய பத்து வயது கடைசி மகள் மர்யம்
" உம்மா நேத்து சோறும் சம்புளும், இன்டக்கி சோறு மட்டுமா?"

 "மகள்! ஒங்குலுக்கு நாளைக்கு நல்லா ஆக்கித் தாரேன்" என கல்பு நிறைய கவலையுடன் மகளை ஆறுதல் படுத்துகிறாள் மர்ளியா.

பானையை அடுப்பிலே வைக்கும் போது.......

கனவனை இழந்த ஜெஸீமாவின் பச்சிளம் பாலகன்கள் வேலியால் தலையை போட்டு

 "மாமி!! எங்களுக்கும் பசியாக இருக்குது" 

என்ற பாலகர்களின் சப்தம் மர்ளியாவின் கல்பிற்கு சோறு சமைக்க விடவில்லை.

"மகள் மர்யம்! ஒரு கோப்பேக்கு தண்ணியும்  உப்பும் கொண்டு வாங்கோ" எனக் கூறி 

அனைவருக்கும் கஞ்சி காய்ப்பதற்கு ஆயத்தமாகிறாள்.

"மர்ளிய மாமி எங்களுக்கும் தரப்போரே" என்று குழந்தைகளின் முகங்களில் புன்முறுவல்.

தேங்காய் பாலும் இல்லாத கஞ்சை மனவருத்தத்துடன் ஜேஸீமாவின் குழந்தைகளுக்கு மர்ளியா கொடுக்கிறாள்.

குழந்தைகள் சந்தோஷ வெள்ளத்தில் அருந்தும் காட்சியைப் பார்த்த மர்ளியாவுக்கு பசியும் தீர்ந்துவிட்டது.
விழிகளும் குளமாகின்றது.

மிகுந்த மகிழ்ச்சியுடன் கஞ்சைக் குடித்த குழந்தைகள்...

"மாமி! ரெண்டு நாளைக்கு பொறகு இன்டேக்கி தான் நாங்க சாப்பிட்ற"

இதைக் கேட்ட  மர்ளியாவின் கண்களால்  மீண்டும் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோடுகின்றது..............

(உங்களது இக் கஷ்டங்களுக்கும் துன்பங்களுக்கும் அல்லாஹ் உயர்ந்த சுவர்க்கத்தை வழங்குவானாக!)

(சம்பவத்தில் பெயர்கள்
 மாற்றப்பட்டுள்ளது)

 அன்பான சகோதர சகோதரிகளே! 

🔹இலங்கையின் ஒவ்வோர் பிரதேசத்திலும் இவ்வாறு பல உள்ளங்கள் யாசிக்க முடியாமலும் தலைகுனியாமலும்  வெட்கத்தோடு ஏங்கிக் கொண்டிருக்கின்றன. 

🔹உண்மையிலேயே மனித நேயம் படைத்த ஒவ்வோர் ஆத்மாவும் இவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள் என்பது நிச்சயம்.

🔹உங்களுடைய வாழ்க்கையில் சில துஆக்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றால்.....

கஷ்டத்திலே வாடக்கூடிய மனிதர்களின் கண்ணீரை துடைத்து விடுங்கள்.

🔹நீங்கள் செய்யும் தர்மத்தின் பலா பலன்களை உங்களுடைய கண்களால் காணாதவரை அல்லாஹ் உங்களுடைய உயிர்களை  கைப்பற்ற மாட்டான்.

🔹இலங்கையில் பல நல்லுள்ளம் படைத்த பரோபகாரிகள் தமது தர்மங்களை வாரி வழங்கியதையும் நன்றியோடு நினைவு கூறுகின்றோம்.

🔹நாம் அனைவருக்கும் வாரி வழங்கி விட்டோம் என பெருமூச்சு விடவேண்டாம்.

🔹ஸம்ஸம் நீரூற்று போல் உங்கள் செல்வங்களும் பெருக வேண்டுமா?

 மீண்டும் வாரி வழங்குங்கள். 

எனவே உங்கள் பிரதேசத்திலும்  தனது கஷ்டங்களை மறைத்து வாழும் ஏழைகளுக்கு உதவிக்கரம் நீட்ட முனைப்புடன் செயற்படுங்கள்.

(இதை வாசித்தவர்கள் ஏனையோருக்கும் share செய்யுங்கள்.)

ஒரு ஏழையின் கண்ணீரை துடைக்க நீங்கள் காரணமாகலாம்.

✒ அரபாத் ஸைபுல்லாஹ் (ஹக்கானி)

No comments:

Post a Comment