Saturday, April 3, 2021

20 கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன், துப்பரவு பணி செய்பவர் கைது - கட்டுநாயக்க விமான நிலையத்தில் சம்பவம்


சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 17 கிலோகிராம் தங்கத்துடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட தங்கம் 20 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 37 வயதான சந்தேகநபர் ஒருவர் இன்று -03- கைது செய்யப்பட்டதாக சுங்கத் திணைக்களத்தினர் அறிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தூய்மைப்படுத்தல் பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனமொன்றின் மேற்பார்வையாளர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றுமொரு நபரினால் குறித்த தங்கம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் எனவும், அதனை வெளியில் கொண்டு செல்வதற்கு கைதாகியுள்ள சந்தேகநபரின் உதவி பெறப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சுங்கத்திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பிரதி மேற்பார்வையாளர் நுவான் அபேநாயக்க தெரிவித்தார். 

No comments:

Post a Comment