Saturday, April 3, 2021

என்னை பற்றி சர்வதேசத்திலும், உள்நாட்டிலும் பொய் பிரச்சாரம் முன்னெடுப்பு - ஜனாதிபதி கோத்தபாய


என்னை பற்றி சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் பொய்பிரச்சாரங்களை முன்னெடுக்கும் திட்டமிட்ட நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்

முன்னர் வெள்ளை வான்கள் குறித்தும் சுறாக்கள் குறித்தும் என்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன தற்போது சூழல் குறித்து குற்றம்சாட்டுகின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

கிராமத்துடன் கலந்துரையாடல் திட்டத்தின் 17 ஆம் கட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் வவுனியா போகஸ்வெவ மகா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்றது.

வட மாகாணத்தில் இடம்பெற்ற முதலாவது கிராமத்துடன் கலந்துரையாடல் இதுவாகும்.

அமைச்சர்கள், அமைச்சுகளின் செயலாளர்கள், பல்வேறு நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, சூழல் அழிப்பு குற்றச்சாட்டு தொடர்பிலும் புற்றுநோய்க் காரணியுள்ள தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விடயம் தொடர்பிலும் ஜனாதிபதி கருத்துத் தெரிவித்தார்.

மக்களின் பிரச்சினைகளை வன பாதுகாப்பு அதிகாரிகள் பார்ப்பதில்லை எனவும் வன பாதுகாப்பு பணிகளில் மாத்திரமே ஈடுபடும் அவர்கள் மறுபுறத்தை கவனிப்பதில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் தெங்கு அபிவிருத்தி செய்யப்படாததால், தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் உரிய தரத்தில் உள்ளதா என ஆராய அதிகாரிகள் உள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவர்கள் அதனை கைப்பற்றியவுடன் அரசாங்கத்தை பலரும் தூற்றுவதாகக் கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீது குற்றஞ்சாட்டி, அவரை தோற்கடிப்பதற்கு எத்தனோல் ஒரு காரணமாக இருந்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கும். எத்தனோல்… எத்தனோல்… என அனைத்து இடங்களிலும் கூறப்பட்டது. பதாகைகள் ஒட்டப்பட்டமை நினைவிருக்கும் அல்லவா? மக்களிடையே அணுகுமுறை மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். திருட்டுத் தனமாக செயற்படும் இந்த வர்த்தகர்களும் எமது மக்களே. திருட்டுத்தனமாகக் கொண்டு வருகின்றனர். அவற்றைக் கைப்பற்றவே அரச நிறுவனங்கள் உள்ளன. அவற்றைக் கைப்பற்றாவிட்டால், அவை மக்களைச் சென்றடையும்

என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment