Friday, May 7, 2021

"பாக்கீர் மார்க்காரின் குடும்பத்தின் மீது, சிங்கள சமூகம் கொண்டுள்ள கௌரவம் புதுமையானது" - முஸ்லிம் சமூகத்துக்கே முன்மாதிரி..!


கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் முன்னாள் சபாநாயகர் மர்ஹூம் எம். ஏ பாக்கீர் மார்க்காரின் நினைவு தின விழாவுக்குச் சென்ற ஓர் இளம் பத்திரிகையாளர், முன்னாள் சபாநாயகர் எம். ஏ. பாக்கீர் மார்க்காரின் குடும்பத்துக்கு சிங்கள சமூகத்தின் மத்தியில் கிடைக்கின்ற கௌரவத்தைப் பார்க்கின்ற போது தனக்குப் புதுமை ஏற்படுவதாகச் சொன்னார். நான் அவரிடம், "ஏன் உமக்குப் புதுமை ஏற்படுகின்றது?" என்று வினவினேன். "பெரும்பான்மைச் சமூகம் சிறுபான்மைச் சமூகமான முஸ்லிம்களை தாறும் மாறுமாக விமர்சனம் செய்கின்ற இந்தக் காலத்தில் மர்ஹூம் எம். ஏ. பாக்கீர் மார்க்காரின் குடும்பத்தின் மீது சிங்கள சமூகம் கொண்டுள்ள கௌரவம் புதுமையானது" என்று அவர் பதில் வழங்கினார். மர்ஹூம் எம். ஏ. பாக்கீர் மார்க்காரின் புத்திரரான முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்காரைப் பற்றிப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்தக் கற்கைகள் துறையின் பேராசிரியர் முவெடகம ஞானாநந்த தேரர் ஒரு முறை குறிப்பிடுகின்ற போது "முன்னாள் சபாநாயகர் எம். ஏ. பாக்கீர் மார்க்காரின் புத்திரர் முன்மாதிரியான ஓர் அரசியல்வாதியாக இருக்கின்றார். அவர்களின் குடும்பம் முஸ்லிம் சமூகத்துக்கே முன்மாதிரியாக இருக்கின்றது." என்று குறிப்பிட்டார். மர்ஹூம் எம். ஏ. பாக்கீர் மார்க்காரின் பேரரான ஆதில் பாக்கீர் மார்க்கார் இறந்த செய்தியை ஒரு தனியார் சிங்கள இணையத்தளம் வெளியிட்டிருந்தது. அந்த செய்திக்குக் கீழாக பல சிங்கள வாசகர்கள் தமது கருத்துக்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் மர்ஹூம் பாக்கீர் மார்க்காரின் பேரர் பல்லின சமூகத்துக்கு மத்தியில் முன்மாதிரியான ஒரு முஸ்லிம் இளைஞராக வாழ்ந்ததாகப் பல சிங்கள சகோதரர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர். மர்ஹூம் எம். ஏ. பாக்கீர் மார்க்காரின் குடும்பத்துக்கு சிங்கள சமூகத்தின் மத்தியில் இவ்வாறான ஒரு தனி கௌரவம் கிடைப்பதற்கான காரணம் எம். ஏ. பாக்கீர் மார்க்கார் என்ற தனி மனித ஆளுமையாகும். இந்த கௌரவம் அந்தத் தனிமனிதனை மையமாகக் கொண்டே அவரின் குடும்பத்தைச் சுற்றி வியாபித்தது.

மர்ஹூம் எம். ஏ. பாக்கீர் மார்க்காரின் அரசியல் ஆதர்ச குருவாகப் பல இடங்களிலும் ரீ. பி. ஜாயா சொல்லப்படுகின்றார். என்றாலும் அவரின் வாழ்க்கையை ஆய்வு செய்கின்ற போது அவரின் அரசியலில் மட்டுமல்ல அவரின் முழு ஆளுமைக் கட்டமைப்பிலும் ரீ. பீ. ஜாயாவின் தாக்கத்தை அவதானிக்கலாம். ரீ. பீ. ஜாயா கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் அதிபராக இருந்த போது, பெரும்பான்மையாக முஸ்லிம் மாணவர்களைக் கொண்ட ஒரு கல்லூரியில் ஒரு சிங்கள மாணவனை பிரதான மாணவர் தலைவர் பதவிக்கு நியமனம் செய்தார். ரீ. பீ. ஜாயா மந்திரி சபையின் உறுப்பினராக இருந்த போது இலங்கைக்கு சுதந்திரம் வழங்குவது தொடர்பான விவாதம் மந்திரி சபையில் நடைபெற்றது. அவர் இந்த விவாதத்தில் உரையாற்றுகின்ற போது, சுதந்திரத்துக்காக எந்தவொரு கோரிக்கையையும் முஸ்லிம் சமூகம் முன்வைப்பதில்லை என்றும் முஸ்லிம்களின் உரிமைகளை அவர்களது மூத்த சகோதரர்களான சிங்கள மக்கள் பாதுகாத்து தருவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகக் குறிப்பிட்டார். "பெரும்பான்மைச் சமூகத்தின் மீது வைக்கின்ற நம்பிக்கையும் பரஸ்பர விட்டுக் கொடுப்பும் சிறுபான்மைச் சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாத்துத் தரும்" என்ற திடமான நம்பிக்கை அவரிடம் இருந்தது. சிறுபான்மையினரின் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளுவதற்கும் பாதுகாத்துக் கொள்ளுவதற்கும் புதிய ஒரு வழியை ரீ. பீ. ஜாயா காட்டினார். அவர் சிறுபான்மையினரான முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளுவதற்கு பெரிய போராட்டங்களை செய்யவில்லை. ஜாயாவின் வழியை நடைமுறையில் செயற்படுத்திக் காட்டியவராக மர்ஹூம் எம். ஏ. பாக்கீர் மார்க்கார் இருக்கின்றார். அவரின் குடும்பமும் அந்த வழியில் தான் பயணிக்கின்றது. 

மர்ஹூம் எம். ஏ. பாக்கீர் மார்க்கார் பேருவளை நகரை சபைத் தலைவராக இருந்த போது, 1953ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நகர சபை மாதாந்தப் பொதுக் கூட்டத்தில் சிங்களத்தை அரச கரும மொழியாக்க வேண்டும் என்ற பிரேரணையை முன்வைத்தார். அந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அகில இலங்கை முஸ்லிம் லீக் கூட்டத்தில் சிங்களத்தை அரச கரும மொழியாக்குவதன் அவசியத்தை அவர் வலியுறுத்திப் பேசினார். இதனால் முஸ்லிம்கள் பெரும்பான்மைச் சிங்கள சமூகத்தின் கௌரவத்துக்கும் மதிப்புக்கும்  பாத்திரமானார்கள். அந்த கௌரவமும் மதிப்பும் இன்று வரையும் எம். ஏ. பாக்கீர் மார்க்காரின் குடும்பத்தில் நிலை கொண்டுள்ளது. அதிகமான தேரர்கள் இன்று வரையும் பாக்கீர் மார்க்காரின் குடும்பத்தை ஆதரிக்கின்றனர். அதிகமான சிங்கள மக்கள் எம். ஏ. பாக்கீர் மார்க்காரின் குடும்பத்தில் தோன்றிய அரசயல்வாதிகளைப் பற்றி நல்ல கருத்துக்களையே பதிவு செய்கின்றனர்.

மர்ஹூம் எம். ஏ. பாக்கீர் மார்க்காரின் நடை, உடை, பாவனை என்ற அனைத்து விடயங்களும் இலங்கையின் தேசிய கலாசாரத்துக்குப் பொருத்தமானதாக இருந்தது. அவர் அரசியல் கூட்டங்களில் உரையாற்றுகின்ற போது புத்தரின் தர்மப் பதங்களை மேற்கோள் காட்டிப் பேசினார். சிங்கள மக்கள் எம். ஏ. பாக்கீர் மார்க்காரை முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த ஒருவராக நோக்கவில்லை. அவர்கள் அவரை அவர்களில் ஒருவராகவே நோக்கினார்கள். மர்ஹூம் எம். ஏ. பாக்கீர் மார்க்கார் சிங்கள மக்களுடன் ஒன்றித்து வாழ்ந்தாலும் அவர் தான் ஒரு முஸ்லிம் என்ற தனித்துவத்தை இழக்கவில்லை. இதனை எம். ஏ. பாக்கீர் மார்க்காரின் குடும்பத்திலும் காணலாம். தனது சமய அடையாளத்தையும் பாதுகாத்துக் கொண்டு சிங்கள மக்களில் ஒருவராக இருந்து கொண்டு அவர்களின் மதிப்பையும் கௌரவத்தையும் பெற்றுக் கொண்டதில் தான் அவரை ஒரு விஷேட தனிமனித ஆளுமையாக முஸ்லிம் சமூகத்துக்கு இனங்காட்டுகின்றது. இலங்கை பாராளுமன்றத்தின் பத்தொன்பதாவது சபாநாயகராக இருந்த கரு ஜயசூரிய முன்னாள் சபாநாயகரான மர்ஹூம் எம். ஏ. பாக்கீர் மார்க்கரைப் பற்றிச் சொன்ன ஒரு கூற்றை இந்த இடத்தில் மேற்கோள் காட்ட விரும்புகின்றேன். அதுவே எம். ஏ. பாக்கீர் மார்க்கரைப் பற்றிய சிறந்த வரைவிலக்கணமாக இருக்கின்றது. இதனை அவர் மர்ஹூம் எம். ஏ. பாக்கீர் மார்க்காரின் 21ஆவது வருட நினைவு தின விழாவில் சொன்னார். அவர் பின்வருமாறு சொன்னார். "இலங்கைப் பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகரான எம். ஏ. பாக்கீர் மார்க்கார் ஓர் இனவாதியாக இருக்கவில்லை. ஒரு மதவாதியாகவும் இருக்கவில்லை. அவர் இனங்களுக்கு இடையில் நெருப்பை மூட்டவில்லை. அவர் அரசியலுக்கு முன்மாதிரியாக இருந்தார். அவர் இந்த நாட்டின் சிறந்த குடிமகனாக இருந்தார். அவர் ஒரு சிறந்த முஸ்லிம் பக்தனாக இருந்தார். இவற்றை நாம் எம். ஏ. பாக்கீர் மார்க்காரின் குடும்பத்திலும் காண்கிறோம்." இந்த வரைவிலக்கணம் இன்றைய காலத்தில் நடைமுறையில் இருக்கின்ற அதிகமான பிரச்சினைகளுக்குத் தீர்வாக இருக்கின்றது.

இன்றைய காலத்தில் பெரும்பான்மையான சிங்கள சமூகத்தால் தாங்கள் பாதிப்புக்கு உட்படுவதாக முஸ்லிம்கள் கருதுகின்ற நிலை உருவாகி இருக்கின்றது. இந்த நிலையில் சில பிரச்சினைகளின் போது முஸ்லிம் அமைப்புக்களும் முஸ்லிம்களும் அதனைக் கையாளுகின்ற விதம் ஒருவகையான போராட்டத்தை ஒத்த தோற்றத்தைக் கொடுக்கின்றது. ஒரு போராட்டத்தின் முடிவு ஒரு பெரிய அழிவாகத் தான் இருக்கும். அதற்கு வரலாற்றில் நிறையப் பாடங்கள் இருக்கின்றன. போராட்டம் எமது முன்னோரின் முன்மாதிரி அல்ல. இனங்களுக்கு இடையில் உருவாகின்ற பிரச்சினைகளுக்கு அரசியலில் தீர்வு இல்லை. மாறாக அதற்கான தீர்வு நம்பிக்கையிலும் பரஸ்பர விட்டுக் கொடுப்பிலுமே இருக்கின்றது. இந்த இடத்திலே தான் இலங்கை முஸ்லிம் சமூகம் முன்னாள் சபாநாயகரான மர்ஹூம் எம். ஏ. பாக்கீர் மார்க்காரை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டி இருக்கின்றது. ஓர் இலங்கை முஸ்லிம் குடிமகனாக அவர் விட்டுச் சென்ற முன்மாதிரிகள் தற்போது இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளாக இருக்கின்றன. அவரின் முன்மாதிகளை இலங்கை முஸ்லிம்கள் பின்பற்றுகின்ற பட்சத்தில் மர்ஹூம் எம். ஏ. பாக்கீர் மார்க்காரின் குடும்பத்துக்கு சிங்கள சமூகத்தின் மத்தியில் கிடைக்கின்ற கௌரவமும் மதிப்பும் இயல்பாகவே முழு முஸ்லிம் சமூகத்துக்கும் கிடைக்கும். அதனால், முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அனைத்துப் பிரச்சினைகளும் தீர்வு கிடைத்து, முஸ்லிம்கள் இந்த நாட்டில் பாக்கீர் மார்க்காரின் குடும்பத்தைப் போல் கௌரவமாகவும் கண்ணியமாகவும் வாழுவார்கள். எம். ஏ. பாக்கீர் மார்க்காரை நினைவுபடுத்துகின்ற இந்தக் காலத்தில் இந்தக் கட்டுரையினூடாக சொல்லக்கூடிய சிறந்த செய்தியாக அதுவே இருக்கின்றது.

கட்டுரை – மபாஸ் ஸனூன் (விரிவுரையாளர்)  கிழக்குப் பல்கலைக்கழகம்

No comments:

Post a Comment