Thursday, May 6, 2021

முஸ்லிம்கள் எதிரியாக வரித்துக்கொள்ளப்பட்டு பழிவாங்கப்படுகிறார்கள் - ஹக்கீம் (வீடியோ)


அரசாங்கம் தங்களது இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக முற்றாக அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் பயங்கரவாதத்துக்கு பதிலாக, பிரதான துரோகியாக முஸ்லிம் மக்களை வரித்துக்கொண்டு செயற்படுவதை நாங்கள் காண்கின்றோம். அதனடிப்படையிலேயே கொரோனாவில் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய முழு உலக நாடுகளும் அனுமதித்திருந்த நிலையில், முஸ்லிம்களை பழிவாங்கும் வகையில் இலங்கையில் மாத்திரம் எரியூட்டி வந்தனர்  என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் (05) இடம்பெற்ற கொவிட் 19 சவால்களுக்கு மத்தியில் நாட்டில் காணப்படும் தற்போதைய நிலைமைகள் தொடர்பான இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

இராஜாங்க அமைச்சர் ரணவீர எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பலவற்றை முன்வைத்தார். நாங்கள் அவசியமின்றி பூதங்களை உருவாக்குவதாகக் கூறினார். சமயங்களுக்கிடையே பிளவை உண்டுபண்ணி, இனங்களுக்கிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்துவதன் மூலம் அவற்றினால் பயனடைய எத்தனிப்பதாகவும் கூறினார். அவற்றிற்குப் பதிலளித்தே ஆக வேண்டும்.

 ஆயினும், எனது உரையின் ஆரம்பத்திலேயே பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் காலை வேளையில் கூறிய தேசிய அனர்த்த சபை பற்றிய விடயத்தை வலியுறுத்திப் பேச விரும்புகின்றேன். இராஜாங்க அமைச்சர் ஜயசுமண திசாநாயக்க இதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு சென்று இந்த விடயத்தைக் கையாள வேண்டும்.

இராஜாங்க அமைச்சர் ரணவிர முன்வைத்த பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பற்றிக் கூறுவதனால், கொவிட் நிலைமையை பயன்படுத்திக்கொண்டு மத வேறுபாட்டை ஏற்படுத்த முற்படுவதாக அரச தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். அரச பலத்தை பயன்படுத்திக்கொண்டு முஸ்லிம் மக்கள் வாய்திறக்க முடியாதவகையில், குறிப்பாக, அக்குறணை, அட்டுலுகம போன்ற முஸ்லிம்கள் பரவி வாழும் பிரதேசங்கள் மாதக் கணக்கில் முடக்கிவைக்கப்பட்டிருந்தன. சில கூஜாத்தூக்கி ஊடகங்களும் இதனை தொடர்ந்து காண்பித்து முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில்தான் கொவிட் தொற்று பரவுவதாகப் பிரசாரத்தை மேற்கொண்டுவந்ததையும் நாங்கள் கண்டோம்.

அரசாங்கம் தங்களது இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக முற்றாக அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் பயங்கரவாதத்துக்கு பதிலாக, பிரதான துரோகியாக முஸ்லிம் மக்களை வரித்துக்கொண்டு செயற்படுவதை நாங்கள் காண்கின்றோம். அதனடிப்படையிலேயே கொரோனாவில் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய முழு உலக நாடுகளும் அனுமதித்திருந்த நிலையில், முஸ்லிம்களை பழிவாங்கும் வகையில் இலங்கையில் மாத்திரம் எரியூட்டி வந்தனர் .

இறுதியில் ஜெனீவாவில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கவே, அடக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டி ஏற்பட்டது என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

இன்று காலை இந்தச் சபையில் மக்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இன்னொரு "குண்டை"த் தூக்கிப் போட்டார். 

பாராளுமன்ற உறுப்பினரான ரிசாட் பதியுதீனை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைத்திருக்கும் நிலையில், அவரை சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள எதிர்க் கட்சியால் சபாநாயகரிடம் அனுமதி கோரப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உரையாற்றினார். அந்த விடயத்தில் சபாநாயகர் நடந்து கொண்ட விதம் மிகவும் கவலைக்குரியது .பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமையையும் வரப்பிரசாதங்களையும் மறுப்பதன் மூலம் எதிர்கட்சியை ஒடுக்குவதற்கு மேற்கொள்ளப்படும் எத்தனத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment