Saturday, December 16, 2023

பள்ளிவாசலும், பார்கவி அம்மாவின் விசால மனசும்


இந்தியா - கோழிக்கோடு மாவட்டம் பேராம்பிரா அருகில் உள்ள கல்லோடு நகரில்  சிறியளவில் பழமையான தொழுகை பள்ளி இருந்தது.. நாட்கள் செல்லச் செல்ல தொழ வருபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க பள்ளிவாசலில் இடநெருக்கடி ஏற்பட்டது.


பள்ளியின் இரண்டு புறமும் வேறு தனியார் கட்டிடங்களும் முன்புறம் ரோடு என்பதாலும் விரிவாக்க பணிகள் நீண்டு கொண்டே சென்றது.


பள்ளி விரிவாக்கி புதிதாக கட்டுவதின் தேவை அதிகரிக்க, வேறு வழியில்லாத மஸ்ஜித் நிர்வாகிகள் பள்ளிவாசல் பின்புறம் வசிக்கும் பார்கவி அம்மா குடும்பத்தை அணுகி இடநெருக்கடி காரணமாக தேவையான இடம் விலைக்கு தருவதற்கு தயக்கத்துடன் கோரிக்கை வைத்தனர்..


மஸ்ஜித் நிர்வாகிகள் வேண்டுகோளை தனது பிள்ளைகளுடன் ஆலோசனை செய்த பார்கவி அம்மா தனக்கு சொந்தமான நிலத்தில் மசூதிக்கு தேவையான இரண்டு சென்ட் வழங்க சம்மதம் தெரிவித்ததோடு, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இடத்தை இலவசமாக வழங்க முன்வந்தது மஸ்ஜித் நிர்வாகிகளுக்கு வியப்பை ஏற்படுத்தியது.


இந்துக்களும், முஸ்லிம்களும் இணக்கமாக வசிக்கும் கல்லோடு பகுதியில் பள்ளிவாசல் கட்டுமானப்பணிக்கு அனைத்து தரப்பினரும் உதவினர்.


பள்ளிவாசல் விரிவாக்கி புதிதாக கட்டி முடிக்கப்பட்டு மஸ்ஜித் றஹ்மா என்று பெயர் சூட்டப்பட்டு இரண்டு தினங்கள் முன்பு திறப்புவிழாவிற்கு வருகை தந்த முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பாணக்காடு சாதிக் அலி ஷிஹாப் தங்கள் உட்பட அனைவருக்கும் லட்டு வழங்கி வரவேற்றனர் அருகில் உள்ள கோயில் கமிட்டி தலைவர் பிஜு கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள்..


நிலம் தானமாக தந்த பார்கவி அம்மாவின் குடும்பத்தினரும் கவுரவிக்கப்பட்டனர்...

Colachel Azheem





No comments:

Post a Comment