Wednesday, January 27, 2021

3 நாட்கள் பயிற்சி எடுத்தால் போதும் இங்கிலாந்து வீரர்களை சனத்தும், அரவிந்தவும் துவம்சம் செய்வார்கள் - அர்ஜூன


இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர்களை விரட்டி விரட்டி அடிக்கக்கூடிய ஆற்றல் இன்னமும் முன்னாள் துடுப்பாட்ட நட்சத்திரங்களான அரவிந்த டி சில்வா மற்றும் சனத் ஜயசூரிய ஆகியோருக்கு உண்டு என உலகக் கிண்ணத்தை வென்ற அணித் தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வைற் வொஷ் முறையில் படுதோல்வியைத் தழுவியிருந்த நிலையில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

சனத் ஜயசூரிய மற்றும் அரவிந்த டி சில்வா கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டு பல ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், மூன்று நாட்கள் பயிற்சி எடுத்துக் கொண்டால் தற்போதைய இங்கிலாந்து அணி வீரர்களை துவம்சம் செய்யக்கூடிய ஆற்றல் மிகுந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தற்போதைய அணியின் கிரிக்கெட் வீரர்கள் ஒழுக்கத்துடன் கிரிக்கெட் விளையாட்டை விளையாடுவதில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தாங்கள் விளையாடிய காலத்தில் அணி தோல்வியை தழுவினால் அதனையிட்டு தாங்கள் பெரிதும் வெட்கப்படுவதாகவும் தற்போதைய வீரர்கள் அது பற்றிய கரிசனை கொள்ளாதவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு உடல் பருமனாக இருந்த போதிலும் இந்த இளம் வீரர்களை விடவும் சிறந்த முறையில் தமக்கு இன்னும் விளையாட முடியும் என கருதுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment