பெளத்த சமயத்துக்கு அவதூறு கூறி அவமதித்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள சிறீலங்கா தெளஹீத் ஜமா அத்தின் பொதுச் செயலாளர் ஆர்.அப்துர் ராஷிக்கை 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப்பிணையில் விடுதலை செய்த நீதிமன்றம் அவர் வெளி நாடு செல்வதையும் தடை செய்ததுடன் அந்த அமைப்பின் ஏனைய முக்கிய உறுப்பினர்களிடம் வாக்கு மூலம் பதிவு செய்யுமாறும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டது.
மேல் மாகணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஊடாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணைகளின் போதே புதுக்கடை முதலாம் இலக்க நீதிவான் நீதிமன்றின் நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய மேற்கண்டவாறு உத்தரவு பிரப்பித்தார்.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் தேரர் ஒருவர் செய்திருந்த முறைப்பாட்டுக்கு அமைவாக அந்த பிரிவால் விஷேட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இதன் படி நேற்றைய தினம் வழக்கு விசாரணைகளுக்கு ஆஜராகுமாறு தெளஹீத் ஜமா அத்தின் செயளாலருக்கு நீதிமன்ரினால் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
அதன் படி பிரதிவாதியான குறித்த அமைப்பின் செயலாளர் அப்துர் ராஷிக் மன்றில் ஆஜராகியிருந்ததுடன் அவர்சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ரணவக தலைமையில் எஸ்.பீ.ஹபீல்,சப்ராஸ் ஹம்ஸா, ரமீஸ் பஸீர் ஆகியோர் உள்ளடங்கிய சட்டத்தரணிகள் குழு ஆஜராகியிருந்தது.
முறைப்பாட்டாளர் தரப்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனா நாயக்க , கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் உள்ளிட்டவர்கள் ஆஜராகியிருந்ததுடன் தேரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய தலைமையிலான சட்டத்தரணிகள் குழு ஆஜராகியிருந்தது.
இதன் போது மன்றில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய பிரதிவாதியினால் இணையத்தளத்துக்கு வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் புத்தர் மனித மாமிசம் சாப்பிட்டதாகவும், புத்தர்கள் மூன்ரு மாணிக்கங்கள் எனக் கூரி கல்லை வணங்கும் மடையர்கள் எனக் கூரி முழு பெளத்த சமூகத்தையும் ஆத்திரத்துக்கும் கவலைக்கும் உள்ளாக்கியிருப்பதாக குறிப்பிட்டார்.
இதனிடையே பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேன நாயக்க, முறைப்பாட்டுக்கு அமைவாக அனைத்து ஆதாஅரங்களையும் திரட்டி விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் சட்ட மா அதிபரின் உதவியையும் நாடவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் இதன் போது குறுக்கிட்ட சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய தெள்ஹீத் ஜமா அத் ஒரு பயங்கரவாத அமைப்பு எனவும் அதனை தடை செய்ய வேண்டும் எனவும் மன்றை கோரினார். வெளி நாட்டிலிருந்து அந்த அமைப்பு நிதி பெறுவதாகவும் இதன் போது அவர் குற்றம் சுமத்தினார்.
இதனை அடுத்து அதனை நிராகரித்த தெளஹீத் ஜமா அத் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி ரணவக அவ்வாறு நிதி பெறுவதென்பதை முடிந்தால் நிறூபிக்குமாரு சவால் விடுத்தார். அத்துடன் யூ டியூபில் வெளியாகியுள்ள குறித்த புத்த அவமதிப்பு கருத்துக்களைக் கொண்ட வீடியோவை முற்றாக அதிலிருந்து நீக்க நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் இந்த விவகாரத்தை சமாதானமாக முடித்துக்கொள்ள விரும்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தமது கட்சிக் காரர்கள் இதன் பின்னர் பெளத்தம் உள்ளிட்ட எந்தவொரு மதம் தொடர்பிலும் விமர்சனத்தில் ஈடுபட மாட்டார்கள் எனவும் அவ்வாறு ஏதேனும் நடவடிக்கையில் ஈடுபட்டால் அதிக பட்ச தண்டனை வழங்குமாரும் குறிப்பிட்டார். அத்துடன் தமது கட்சிக்காரருக்கு பிணை வழங்குமாறும் அவர் கோரினார். எனினும் அதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
எனினும் இரு தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிவான் கிஹான் பிலப்பிட்டிய பிரதிவாதிக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்தார். அத்துடன் பிரதிவாதியின் கடவுச் சீட்டை தேசிய புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்ட அவர் ஒவ்வரு வெள்ளிக்கிழமையும் பிரதிவாதி பிற்பகல் இரண்டு மணிக்கு கையொப்பமிட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
அத்துடன் தெளஹீத் ஜமா அத்தின் ஏனைய பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்களுக்கு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு சென்று வாக்கு மூலம் அளிக்குமாரும் அவர் உத்தரவிட்டார்.
இதனை அடுத்து அந்த வழக்கான து எதிர்வரும் 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment