Wednesday, February 19, 2020

கல்முனையில் வெற்றுச்சுவர்களை அழகுபடுத்திய, முஸ்லீம் இளம் ஓவியர் குழு

பாறுக் ஷிஹான் 

ஜனாதிபதி அவர்களின் வெற்றுச்சுவர்களை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தின்  அம்பாறை மாவட்ட கல்முனை பிரதேசத்தை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ்   வெற்றுச்சுவர்களில்  ஓவியங்கள்   வரையும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு நிறைவடைந்துள்ளது.

 கல்முனை பிராந்தியத்தில் புதன்கிழமை(19) முற்பகல்  இறக்காமம் நிந்தவூர் பிரதேச  ஓவியர்கள் கடந்த 3 தினங்களாக  சுவரோவியங்கள் வரைந்து வந்த நிலையில் இன்று நிறைவு செய்தனர்.

 இளம் பட்டதாரிகள் அமைப்பில் அங்கம் வகிக்கும்  இறக்காமம் மற்றும் நிந்தவூர் பகுதி இளம் பட்டதாரி ஓவியர்களான  முவைஸ் , அப்சன், நப்றிஸ், அப்ஹர் ,குசைன் ,பாஹிம் ஆகியோரே குறித்த அழகிய ஓவியங்களை  நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் வகையில் கல்முனை பொலிஸ் நிலைய சுவர்களில்  வரைந்தனர்.

இங்கு சமூக விழிப்புணர்வை தூண்டக்கூடிய வகையில்  ஓவியங்கள் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை  கலை கலாசாரங்களை பிரதிபலிக்கக் கூடியதான ஓவியங்களும், புகைத்தல், மதுபானம், சமூக வலைத்தளங்கள், கையடக்கத் தொலைபேசிப் பாவனை, இயற்கைக்கு முரணான மனிதர்களின் வாழ்க்கை ஆகியவற்றினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பான விழிப்புணர்வுப் படங்கள் மக்களை கவரக்கூடிய வகையில் வரையப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இது தவிர  கல்முனை தலைமை பொலிஸ் நிலைய சுவர்களில்  ஏலவே கல்முனை பிராந்திய இளைஞர் சேனை கல்முனை இளம் பட்டதாரிகள் அமைப்பு ஆகியன   ஏற்பாட்டில் கல்முனைப் பிராந்தியத்தை பிரதிபலிக்கக்கூடிய வகையில்   சுவரோவியங்கள் வரையும் திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment