(vi) விடுதலைப் புலிகளை அழித்தபோதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினையும் அரசாங்கம் தடை செய்திருக்க வேண்டும். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பே அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுக்கின்றது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்திற்கு பிரச்சினைகள் ஏற்படுமாயின் அது முழு நாட்டையும் பாதிக்கும். இதை அனைத்துக் கட்சிகளும் புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர கருத்துத் தெரிவிக்கையில்,
ஜெனீவா அழுத்தங்களையும் நாட்டில் பிரிவினை வாதத்தினையும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பே ஏற்படுத்துகின்றது. சர்வதேச பிரச்சினைகளைத் தூண்டி இலங்கையில் தனித்தமிழ் ஈழத்தினை உருவாக்கவே சம்பந்தன் கூட்டணி முயற்சி செய்து வருகின்றது.
நாட்டின் பிரச்சினையாக இருந்த விடுதலைப்புலி தீவிரவாதிகளை அழித்த போதே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினையும் தடை செய்திருக்க வேண்டும். அன்று அரசாங்கம் கவனிக்காது செயற்பட்டமை இன்று நாட்டிற்கே பிரச்சினையாக அமைந்துள்ளது.
இன்று அரசாங்கத்திற்கு இருக்கும் முக்கிய எதிரி தமிழ்த் தேசியக்கூட்டமைப்பேயாகும். அவர்களின் செயற்பாட்டினை தடை செய்ய முடியுமாயின் அரசாங்கத்தினால் சர்வதேச பிரச்சினைகளில் இருந்து இலகுவாக வெளிவர முடியும். எனினும், ஜனாதிபதி இதனை செய்யாதிருப்பது ஏன் எனத் தெரியவில்லை. அரசாங்கம் மக்கள் தொடர்பிலேயே முதலில் சிந்திக்க வேண்டும். இலங்கையில் மக்களின் பெரும்பான்மை விருப்பத்திற்கு அமையவே ஆட்சி நடத்த வேண்டும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வார்த்தைகளைக் கேட்டு இலங்கையில் ஆட்சியமைக்க வேண்டிய அவசியம் இல்லை.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினரின் ஒரே எண்ணம் இலங்கையில் தனி தமிழ் ஈழத்தினை உருவாக்குவதே. திருகோணமலை தொடக்கம் மன்னார் வரையில் முழுமையாக தன் வசப்படுத்தி இந்து சமுத்திரத்தில் தனி ஆட்சி நடத்தும் எண்ணமே இன்று கூட்டமைப்பிற்கு உள்ளது. இதனை அடையவே இன்று சர்வதேச சக்திகளுடன் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கைகோர்த்து செயற்படுகின்றன.
நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியும் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். எதிர்கால சிந்தனைகள் இல்லாது தான் தோன்றித்தனமாக அரசியல் செய்வதை ஐக்கிய தேசியக்கட்சி கைவிட்டுவிட்டு நாட்டிற்காக செயற்பட வேண்டும்.
அரசாங்கத்திற்கு பிரச்சினை ஏற்படின் அது முழு நாட்டிற்கும் பிரச்சினையேயாகும். சர்வதேச நாடுகள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தால் அது பொது மக்களையே பாதிக்கும். இதனை மக்கள் விளங்கிக் கொண்டு அரசாங்கத்துக்கு துணையாக செயற்பட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment